9.5 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது தொண்டி போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தொண்டி போலீஸார் வாகனச் சோதனையின்போது 9.5 கிலோ கஞ்சாவுடன் 4 பேரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருவெற்றியூர் ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பைக்குகளில் வந்த 4 பேரிடம் நடத்திய சோதனையில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவாடானை அருகே படப்பையைச் சேர்ந்த லவகுசா (46), சினேக வள்ளிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (47), திருவாடானை சமத்துவபுரத்தைச் சேர்ந்த தனபால் (33), திருவாடானையைச் சேர்ந்த முருகன் (46) எனத் தெரிய வந்தது. இவர்கள் 4 பேர் மற்றும் இவர்களுக்கு கஞ்சா விற்றதாக மதுரையைச் சேர்ந்த பாண்டி ஆகிய 5 பேர் மீதும் தொண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் லவகுசா, கண்ணன், தனபாலன், முருகன் ஆகியோரை கைது செய்து, 9.5 கிலோ கஞ்சா, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான பாண்டியைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE