திருச்சி தில்லைநகர் பகுதியில் இளைஞர் வெட்டிக்கொலை

By செய்திப்பிரிவு

திருச்சி தில்லைநகர் வாமடம் சப்பானி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சப்பானி மகன் வாழைக்காய் (எ) விஜயன்(20). வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிங்காங் குணா என்பவருக்கும் இடையே ஜீவா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த கோட்டை போலீஸார் அங்கு சென்றபோது அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இப்பிரச்சினை தொடர்பாக சமரசம் பேசுவதாகக் கூறி 7 பேர் கொண்ட கும்பல் நேற்று விஜயனை அவரது வீட்டருகே சந்தித்துள்ளது. அப்போது திடீரென அந்த கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் விஜயனை வெட்டியது. அதிர்ச்சியடைந்த விஜயன் அங்கிருந்து தப்பி ஓடியபோது, அருகிலுள்ள சாக்கடை வாய்க்காலுக்குள் தவறி விழுந்தார். இதையடுத்து அந்தக் கும்பல் விஜயனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவலறிந்த தில்லைநகர் போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கிங்காங் குணா, ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்