தூய்மை காவலர்களுக்கு ரூ.3,600 ஊதியம் வழங்க வேண்டும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயற்குழுக் கூட்டம், மாவட்ட தலைவர் சு.பரணி தலைமையில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகளை ஊராட்சிகளில் செயல்படுத்த போதிய கால அவகாசம் வழங்காமல் நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும், இதற்காக தனியே ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும், விடுமுறை தினங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் பெருங்களத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடை மேடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சிகளில் தூய்மை காவலர் பணிபுரிவோருக்கு ரூ.3,600 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என 2019-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்ததற்கு உரிய அரசாணை இதுவரை பிறப்பிக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில், அதன் மாநிலச் செயலர் சார்லஸ் சசிகுமார், மாவட்டச் செயலர் குணசேகரன், மாவட்டப் பொருளர் பவுல் ராஜ், காட்டாங்கொளத்தூர் வட்டார துணைத் தலைவர் ஜெ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE