தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் - ரூ.4.50 கோடி, 30 பவுன் நகை திருடியதாக 4 பேர் கைது :

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வந்தே மாதரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ஆமெல்லா ஜோதினி கோபால்பிள்ளை (58). நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் இவர் வெளியூர் சென்றபோது, வீட்டிலிருந்த ரூ.4.50 கோடி ரொக்கம், 30 பவுன் நகைகள் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகள் மற்றும் திருடியர்கள் சென்ற காரின் பதிவெண்ணைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டதில், முகலிவாக்கம் மணி (31), குரோம்பேட்டை பாரதிபுரம் சதீஷ்குமார் (32), ராயப்பேட்டை சுரேஷ் (32), சிவகங்கை சிங்கம்புணரி ஆறுமுகம்(49) ஆகியோர் திருட்டில்ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்த தனிப்படை போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.1.35 கோடி ரொக்கம் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய காரைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ஆமெல்லா ஜோதினியிடம் கணக்காளராகப் பணிபுரிந்தவரின் தூண்டுதலின்பேரில், அவரது உறவினர்கள் கள்ளச் சாவி மூலம் வீட்டைத் திறந்து, பணம், நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE