சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2.5 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் :

By செய்திப்பிரிவு

சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2021-2022 ஆண்டிற்கான கரும்பு அரவை பணி தொடங்குவதற்கான கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலையின் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

சர்க்கரை ஆலையின் தலைவர் கானூர் பால சுந்தரம் தலைமை தாங்கினார். சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் சதீஷ், துணைத்தலைவர் விநாயக மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"இந்தாண்டு கரும்பு அரவை 2.5 லட்சம் டன் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆலையின் மொத்த அரவைத் திறன் 4.5 லட்சம் டன் அளவிற்கு அரவைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்களுக்கான வாடகை கூடுதலாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 20-ம் தேதி அன்று கரும்பு அரவை தொடங்குவதற்கான இளம் சூடேற்று விழா நடத்தப்படும், வரும் 29-ம்தேதி முதல் கரும்பு அரவை ஆரம்பிப்பது, சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது" என்று ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் விவசாயிகளிடம் தெரிவித்தார். இயக்குநர்கள் குணசேகரன், சிவக்குமார், ஆதிமூலம், சக்திவேல், ஆலையின் அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE