தாமிரபரணி ஆற்றில் - மணல் திருடுவதற்காக அமைக்கப்பட்ட மண் சாலையை அகற்றக்கோரி வழக்கு : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகர நத்தத்தைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தாமிரபரணி ஆற்றிலிருந்து சிலர் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கலகுறிச்சி வரை மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, வைகுண்டம் அணையிலிருந்து புன்னக்காயல் வரை எவ்வளவு மணல் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யவும், மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கல குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள மணல் சாலையை அகற்றவும், சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதற்கு உதவியாக இருந்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE