தவறுதலாக அபாய சங்கிலியை இழுத்ததால் - 15 நிமிடங்கள் தாமதமாக சென்ற கோவை விரைவு ரயில் :

By செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில் நேற்று காலை 8 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. பயணிகள் இறங்கி, ஏறியதும் மீண்டும் புறப்பட்ட ரயில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது ரயிலின் டி-16 பெட்டியில் உள்ள பயணிகள் அபாய சங்கிலியை இழுத்துள்ளனர். இதனால், ரயில் நடுவழியில் நிறுத்தப் பட்டது.

இந்த தகவலை அடுத்து காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அபாய சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, கோவைக்கு செல்லும் ஒரு குடும்பத்தினர் சங்கிலியை இழுத்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அபாய சங்கிலியில் தவறுதலாக பைகளை தொங்க விட்டதால் இப்படி நடந்துவிட்டதாக தெரிவித்தனர். தங்களுக்கு அது அபாய சங்கிலி என்பது தெரியாது என தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவை சென்ற விரைவு ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய குடும்பத்தினரை ரயில்வே பாதுகாப்பு படையினர் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE