கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் :

அணைக்கட்டு: வேலூர் அடுத்த பொய்கை மோட்டூரில் கால்நடை களுக்கான கோமாரி நோய் தடுப்பூசி 2-ம் கட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 95 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அணைக்கட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கை மோட்டூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஊராட்சிகளின் உள்ளாட்சி பிரநிதிகள் மூலம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது கால்நடைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆரோக்கியமாக உள்ள கன்றுகுட்டிகளை பார்வையிட்டு விவசாயிகளிடையே ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த கன்றுக்குட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE