சுங்குடிக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் மத்திய நிதி அமைச்சரிடம் மதுரை எம்பி முறையீடு :

சுங்குடி சேலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தினார்.

மதுரையின் அடையாளங்களில் சுங்குடி சேலையும் ஒன்று. சவுராஷ்டிரா சமூகத்தினர் இத்தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். கைகட்டு வடிவமைப்பு, மெழுகு பிரிண்ட், ஸ்கிரீன் பிரிண்ட், சாயமிடுதல், சலவை செய்தல் போன்ற பணிகளில் 10 ஆயிரம் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய கூலிப்பெண்கள், மீனவப்பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான சுங்குடி சேலை தயாரிக்கும் தொழில் 1995-ல் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கபட்டது. சிறப்பான, நேர்த்தியான இச்சேலைகளுக்கு மத்திய அரசு 2005-ல் புவிசார் குறியீடும் வழங்கி கவுரவித்துள்ளது.

இப்பெருமை வாய்ந்த சுங்குடிச் சேலை தயாரிக்கும் தொழிலானது, மத்திய அரசின் வரி விதிப்புக் கொள்கையால் பாதிக்கப்பட உள்ளது. முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017-ல் மத்திய அரசு 5 சதவீத வரி விதித்தது. தற்போது 12 சதவீதமாக உயர்த்தி 2022 ஜனவரி 1 முதல் அமலாகும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE