மேலூர் அருகே ஆதிதிராவிடர் குடியிருப்பில் - புதிய வீடுகள் கட்டுமானப் பணியை டிச.31-க்குள் தொடங்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலூர் அருகே சேதமடைந்துள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் புதிய வீடுகள் கட்டுமானப் பணியை டிச.31-க்குள் தொடங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கண்மாய்பட்டியைச் சேர்ந்த அழகு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தாட்கோ மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. இங்கு 25 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகளை கட்டித் தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு விசாரித்தது. மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பில், தலா ரூ.2.1 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் 6 மாதம் முதல் 9 மாதங்களுக்குள் வீடுகள் கட்டும் பணி முடிக்கப்படும். அதுவரை இங்குள்ள மக்கள் சமுதாயக் கூடத்தில் தங்கியிருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 2400 சதுர அடி கொண்ட சமுதாயக்கூடத்தில் 25 குடும்பங்கள் எவ்வாறு தங்க முடியும்? சமுதாயக்கூடத்தில் தங்க வைப்பதுடன் தற்காலிக குடிசை வீடுகளை அமைத்து தர வேண்டும்.

புதிய வீடுகள் கட்டும் திட்டத்துக்கும், அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும். டிசம்பர் 31-க்குள் கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும். நாங்கள் நேரில் வந்து கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வோம் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE