நந்த ஸப்தமியை முன்னிட்டு - பாளை.யில் இன்று 108 கோ பூஜை :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோயிலில் நந்த ஸப்தமியை முன்னிட்டு 108 கோ பூஜை இன்று நடைபெறுகிறது.

இக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற வேண்டி,  கலியன் வானமாமலை ஜீயர் ஸ்வாமி தலைமையில் 108 கோபூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இக்கோயிலில் பழைய திருத்தேர் சிதிலமடைந்தததால் தேரோட்டம் நடைபெற்று 6 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு புதிய திருத்தேர் திருப்பணிக்காக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. திருத்தேர் திருப்பணி வேலைகள் தடையின்றி நடைபெறவும், கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவேண்டியும் இன்று 108 கோ பூஜை நடைபெறவுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை நடைபெறும் இந்த பூஜைக்கு நாங்குநேரி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமி, ஆழ்வார்திருநகரி மத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி (எ) ரெங்கராமானுஜ ஜீயர் ஸ்வாமி முன்னிலை வகிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE