நெல்லை மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க - தொழில்நுட்பம் மூலம் தீர்வு தெரிவித்தால் ரூ.2 லட்சம் : வேலைவாய்ப்பு முகாமில் ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வு பெற்ற 1,012 பேருக்கு பணிநியமன ஆணைகளை தமிழக சட்டப் பேரவை தலைவர்மு.அப்பாவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் வே. விஷ்ணு பேசியதாவது:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சிறப்பு அம்சமாக பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம், கங்கைகொண்டான் பாஷ் (BOSCH) லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிதாக கைவினைஞர் பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது. இம்மையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியன் மற்றும் வயர்மேன் சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் எவ்வித கட்டண முமின்றி வழங்கப்படவுள் ளது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுத்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் GovTechThon என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்திலுள்ள தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளுக்கு புதிய தொழில்நுட்பம் வாயிலான தீர்வுகளை https://tirunelvelistartups.com என்ற இணையதளத்தில் பார்த்து பதிவேற்றம் செய்யலாம்.

முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள 4 பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு வழங்குபவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.8 லட்சம் வழங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்