இரட்டை கொலை வழக்கில் - சேலம் இளைஞருக்கு இரட்டை ஆயுள் :

சேலத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் கோட்டை பகுதியில் உள்ள பொதுஇடத்தில் இளம்பிள்ளையைச் சேர்ந்த பட்டாபி (65), அவரது மகன்கள் ஓபுளி (35), மாதேஷ் (28) ஆகியோர் தங்கியிருந்தனர். அந்த இடம் அருகே சேலம் குகை இந்திராநகரைச் சேர்ந்த செல்வகுமார் (38) என்பவரும் தனது குடும்பத்தினரை பிரிந்து தனியாக தங்கியிருந்தார்.பட்டாபியின் மகன்களும், செல்வகுமாரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

கடந்த ஜூலை 31-ம் தேதி செல்வகுமார் கொடுத்த மதுவை அருந்திய ஓபுளியும், அவரது தம்பி மாதேஷும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக, செவ்வாய்பேட்டை போலீஸார் விசாரித்து செல்வகுமாரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் மதுவில் விஷம் கலந்து ஓபுளி மற்றும் மாதேஷுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பான வழக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE