ஆம்பூர் அருகே ஏடிஎம் மையத்தில் : பணம் திருட முயன்ற இளைஞர் கைது :

ஆம்பூர்: ஆம்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை யடிக்க முயன்ற ஆந்திர மாநில இளைஞரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமீபத்தில் உடைத்து அதிலிருந்த பணத்தை திருட முயன்றார்.

ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்ததால் ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே விட்டு விட்டு தப்பியோடினார். இது குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஏடிஎம் மையத்தில் திருட்டு சம்பவம் நடந்தபோது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாடகை காரில் சுற்றித்திரிந்த ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த தசாரே ரோஹித் (22) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில், பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை திருட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த காரை காவல் துறையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE