பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிகள் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு :

மதுரை ஒத்தக்கடை அருகே பேருந்துக்காக காத்திருந்த மாண விகள் மீது கார் மோதியதில் ஒரு மாணவி உயிரிழந்தார்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நெல்லியேந்தல்பட்டியில் அல்ட்ரா கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. கடந்த 23-ம் தேதி கல்லூரி முடிந்து கல்லூரி எதிரே நான்குவழிச் சாலையில் நெல்லியேந்தல்பட்டி விலக்கு அருகில் ஆட்டோ, பேருந்துக்காக மாணவிகள் காத்திருந்தனர்.

அப்போது, அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற கார் ஒன்று, முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்க, திடீரென பிரேக் போட்டது.இதில் நிலைதடுமாறிய அந்த கார் மாணவிகள் மீது மோதியது.

இதில் மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனிக்குமார் மகள் தாரணி(19), அவரது சகோதரி லாவண்யா(17) மற்றும் நித்தீஸ்குமார்(18) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஒத்தக்கடை போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தாரணி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதை அறிந்த அக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று அரசு மருத்துவமனை பிணவறை முன் திரண்டனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒத்தக்கடை காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநர் ரவிக்குமாரை கைது செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE