திருச்சி: தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு(டிஇஎல்சி) புதிய பேராயருக்கான தேர்தலை நடத்த வலியுறுத்தி டிஇஎல்சி நல இயக்கம் சார்பில் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத் தலைவர் ஏ.மகர் ஆண்டனி தலைமை வகித்தார். டிஇஎல்சி திருச்சபையின் 13-வது பேராயராக இருந்த டேனியல் ஜெயராஜ் ஓய்வு பெற்ற பிறகும் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதை தடுக்க வேண்டும். அவர் மீதான புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சிறுபான்மை நல வாரியத் தலைவரின் கீழ் ஓர் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.