திருவண்ணாமலையில் தடை விலகியதால்20 மாதங்களுக்கு பின் பக்தர்கள் கிரிவலம் :

திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று 14 கி.மீ கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர். கரோனா ஊரடங்கால் 2020-ம் ஆண்டு பங்குனி மாத பவுர்ணமிக்கு முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீடித்தது. இருப்பினும் தடையை மீறி, இந்தாண்டு தொடக்கத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு 2-வது ஆண்டாக இந்தாண்டும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2 நாட்களுக்கு தலா 20 ஆயிரம் பக்தர்கள், கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, 20 மாதங்களுக்கு பிறகு, பவுர்ணமி நாளான நேற்று இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

இதற்கிடையில், நவம்பர் 19 மற்றும் 20-ம் தேதி கிரிவலம் செல்ல www.arunachaleswarartemple.tnnrce.in -ல் முன் பதிவு செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு சென்றடைவதற்கு முன்பாக பக்தர்களின் வருகை நேற்று காலை அதிகரித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE