நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக-வைச் சேர்ந்த : இரு ஒன்றியக் குழு தலைவர்கள் திமுக-வில் இணைந்தனர் :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: அதிமுகவைச் சேர்ந்த மோகனூர், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுக மற்றும் திமுக-வினர் உள்ளனர்.இந்நிலையில், நேற்று அதிமுகவைச் சேர்ந்த மோகனூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் க.சரஸ்வதி, புதுச்சத்திரம் ஒன்றியக் குழு தலைவர் சாந்தி வெங்கடாசலம் ஆகிய இருவரும் அக்கட்சியில் இருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஷ்குமார், எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் திமுக-வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதுபோல, வசந்தபுரம் ஊராட்சித் தலைவர் எஸ்.விஸ்வநாதன், மோகனூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கரும்மன்னன் ஆகியோர் திமுக-வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், மோகனூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் பெ.நவலடி , புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.பி.கவுதம், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பா.ராணி, தெற்கு நகர பொறுப்பாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE