நடப்பு பருவத்தேர்வை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாணவர்கள் கூறியதாவது:
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் ஆன்லைனில் நடந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பது, தேர்வு எழுதுவது என்ற நடைமுறைக்கு பழகிவிட்டோம்.
தற்போது, தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேரடித் தேர்வுக்கு நாங்கள் தயாராகாத நிலையில், திடீரென நேரடித் தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது. நடப்புப் பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago