ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தில் மானியம் பெற அழைப்பு :

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில், மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி வட்டாரத்தில், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் 2020-21-ம் ஆண்டிற்கான செலவிடப்படாத மீளப்பெறப்பட்ட நிதிக்கான பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பயனாளி தேர்வு, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் புன்செய் நிலம் இருத்தல் அவசியம். இத்திட்டத்தின்கீழ் ஒரு விவசாயிக்கு ஒரு கறவை மாடு வாங்க ரூ.15 ஆயிரம், ஒன்பது பெண் ஆடு, ஒரு ஆண் ஆடு வாங்க ரூ.15 ஆயிரம், 10 கோழிகள் வாங்க ரூ.4,500-ம், பழ மரங்கள் வாங்கி நடவு செய்ய ரூ.1800-ம், தேனீ வளர்க்கு ரூ.1600-ம், வேளாண் காடுகள் வளர்க்க ரூ.2 ஆயிரம், மண்புழு தொட்டி அமைக்க ரூ.12,500-ம் மற்றும் பயிர் செயல்விளக்கத் திடல் அமைக்க ரூ.7,500-ம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள தகுதியான பயனாளிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE