டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு :

By செய்திப்பிரிவு

`திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்’ என்று, மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் பட்சத்தில், டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்படும். எனவே, பொது மக்கள் தங்கள் வீடு , வளாகம், மொட்டைமாடி ஆகியவற்றில் மழைநீர் தேங்கும் வகையில், எந்த ஒரு பொருளையும் வைத்திருக்காமல் பராமரிக்க வேண்டும். மாநகராட்சியில் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தி உள்ளதா என்று ஆய்வு செய்ய 560- க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

களப்பணியாளர்களின் ஆய்வின்போது தண்ணீர் தேங்கி இருப்பது 2-வது முறை கண்டறியப்பட்டால், அந்த வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். வணிக வளாகங்களில் கழிவறையில் சுகாதாரமின்றி தண்ணீர் தேங்கினால், அபராதம் விதிக்கப்படும்.

காலி மனைகளில் தண்ணீர் தேங்கினால் அவர்களுக்கு காலிமனை வரிவிதிப்புடன் அபராதம் விதிக்கப்படும். பழைய டயர்களை அப்புறப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகள் நடக்கும் வீடுகளின் மொட்டைமாடிகளிலும் தண்ணீர் தேங்கக்கூடாது. இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்