சேலம்: எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று நடந்த கால்நடை சந்தையில் ரூ.4 கோடிக்கு கால்நடை வர்த்தகம் நடைபெற்றது.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை கூடி வருகிறது. நேற்று நடந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் 4,000 ஆடுகள், 2,000 பந்தய சேவல்கள், கோழிகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும், 32 டன் பருப்பு வகைகளையும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், 10 கிலோ எடை வரையுள்ள ஆடுகள் ரூ.5,500 முதல் ரூ. 6,000 வரையும், 20 கிலோ எடை வரையுள்ள ஆடுகள் ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை விற்பனையானது. குட்டி ஆடுகள் ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை விற்பனை செய்யப்பட்டது. பந்தய சேவல்கள் குறைந்தபட்சம் ரூ.ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.4,000 வரை விற்பனை செய்யப்பட்டது. வளர்ப்பு கோழிகள் ரூ.100 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஆடு மற்றும் கோழிகளை வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனர். இதை தவிர சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் 100 டன் காய்கறிகள், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறும்போது, “சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கால்நடைகள் உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர். சந்தையில் நேற்று ரூ.4 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago