நெல்லையில் மழையின் தீவிரம் குறைந்தது : தாமிரபரணியில் தணிந்தது வெள்ளம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழையின் தீவிரம் நேற்று குறைந்திருந்தது. இதனால், தாமிரபர ணியில் வெள்ளம் சற்று தணிந்திருந்தது. இவ்விரு மாவட்டங்களிலும் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவந்த நிலையில் நேற்று அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் மழையின் தீவிரம் குறைந்திருந்தது. நேற்று காலை 8 மணிக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 1, அம்பா சமுத்திரம்- 4, சேரன்மகாதேவி- 1, மூலைக்கரைப்பட்டி- 6, திருநெல்வேலி- 0.5.

பாபநாசம் அணைக்கு 1,365 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 136.50 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 84.70 அடியாக இருந்தது.

52.25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணை நீர்மட்டம் நேற்று காலையில் 50.50 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 60 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த ஒருவார மாக பெய்த பலத்த மழையால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. மழையின் தீவிரம் நேற்று குறைந்த நிலையில் ஆற்றில் வெள்ளம் சற்று தணிந்திருந்தது. திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபம் பெருமளவுக்கு வெளியே தெரிந்தது. வெள்ளம் தணிந்ததால் ஆற்றில் பலரும் நேற்று குளித்தனர்.

சாகுபடி பணி தீவிரம்

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாலும், பாசனத்து க்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் பிசான நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நிலத்தை உழுது சீர்படுத்தும் பணி பல்வேறு இடங்களிலும் நேற்று நடைபெற்றது.

`பிசான பருவத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன’ என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குளங்களும் ஓரளவு நிரம்பின. நேற்று முன்தினம் மழையின் தீவிரம் குறைந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் சிவகிரியில் 12.40 மிமீ, சங்கரன்கோவிலில் 3.20, கருப்பாநதி அணையில் 1 மிமீ மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் தெளிவாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டது. கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால், இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 125.25 அடியாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்