கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், மூலிகை நறுமணத் தோட்டத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்துவைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா 1908-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பூங்கா ரூ.9 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு 47.70 ஏக்கரில் ஏராளமான அரிய தாவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள தாவரங்கள் காப்பகம், கீழ்நிலைத் தோட்டம், நீர்தோட்டம், மரத்தோட்டம், பனைத்தோட்டம், மூங்கில் தோட்டம் போன்றவை இந்த பூங்காவின் முக்கிய இடங்களாகும்.
இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூலிகை நறுமணத் தோட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று திறந்து வைத்தார். இந்த மூலிகை நறுமணத் தோட்டத்தில் 150 அரியவகை மருத்துவ மற்றும் நறுமணமூட்டும் தாவரங்கள் பராமரிக்கப்பட உள்ளன. திறப்பு விழாவில் ருத்ராட்ச மரக்கன்று ஒன்றையும் ஆளுநர் நட்டு வைத்தார். அதைத்தொடர்ந்து, இந்தியாவிலேயே பெரிய கள்ளிச் செடிகளின் தொகுப்பை ஆளுநர் திறந்து வைத்தார். இந்த தொகுப்பில் 220 அரிய கள்ளி வகை தாவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வில், ஆளுநரின் செயலர் ஆனந்த் ராவ், பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார், பதிவாளர் அ.சு.கிருட்டிணமூர்த்தி, முதன்மையர் ல.புகழேந்தி, தோட்டக்கலைக்கல்லூரி, மலரியல் துறை தலைவர் க.ராஜாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago