தென்காசி ஐடிஐயில் நவம்பர் 2-ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தென்காசி மாவட்ட அளவில் தென்காசியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 2-ம் தேதி காலை 9 மணி முதல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்று தற்போது வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்களும், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் கலந்துகொள்ளலாம்.

இதில் பங்கேற்று தேர்வு பெறும் ஒரு வருட தொழிற்பிரிவுகளில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700 மற்றும் இரு வருட தொழிற் பிரிவுகளில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.8,050 எனவும் தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக வழங்கப்படும்.

தொழிற்பழகுநர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தொழிற்பழகுநர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுநர் சான்று வழங்கப்படும்.

இச்சான்று பெற்றவர்கள் பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவன வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற்றவராக கருதப்படுவர்.

குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் தங்கள் முழு விருப்பத்தின்பேரில் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இத் திட்டத்தில் இணைவதன் மூலம் திறன் வாய்ந்த மனிதவளம், தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும். ஒரு தொழிற் பழகுநருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத்தொகையில் 25 சதவீத தொகை கணக்கிடப்பட்டு மத்திய அரசால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும்.

எனவே, ஐடிஐ முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04622-342432, 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்