ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்து வழக்கு - சேலத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை :

By செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவழக்கு தொடர்பாக சேலத்தில் தனிப்படை போலீஸார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மர்ம கும்பல் நுழைந்து, ஆவணங்களை கொள்ளையடித்து விட்டு, பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு தப்பியது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் , சயான் உள்ளிட்ட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி ஆத்தூர் அருகே நடந்த கார் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஐஜி சுதாகர் ஆத்தூரில் விசாரணை நடத்தினார். மேலும், கனகராஜின் அண்ணன் தனபாலிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் கனகராஜ் விபத்து வழக்கு தொடர்பாக கடந்த 4 நாட்களாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்