முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு விவகாரம் - ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் : மா. கம்யூ., மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது நகர மாநாடு நேற்று நடைபெற்றது.

முன்னதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காதல் தம்பதியை சாதியின் பெயரில் ஆணவப் படுகொலை செய்வதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் வாரத்திற்கு ஒரு ஆணவக் கொலை நடந்து வருகிறது. இது தமிழகத்திற்கு அவமானகரமானது. தமிழக மக்கள் சாதிய மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும். இதற்காக கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் கருத்தரங்கு, விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடத்த உள்ளோம்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை விட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருவதாகவும், இது ஆபத்தான போக்கு என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது.

இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர். சிறுபான்மையினர் அதிகரித்து இந்துக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது போன்று பேசியுள்ள அவரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். இரு மதங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவரை ஏன் கைது செய்யவில்லை?

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு 3 சென்ட் குடிமனைபட்டா வழங்கவும் அரசு நடவடிக்கை வேண்டும். அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றார்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு விவகாரம் குறித்து பதில் அளித்த அவர், `அதிமுக ஆட்சியின்போதே அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்துள்ளது. ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்களது கருத்து. சீமான் மோடியின் ஊதுகுழலாக இருந்து வருகிறார்’ என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்