குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னார்வலர்களின் மூலம் சென்னையில் வார்டு வாரியாக விழிப்புணர்வு வீதி நாடகங்களை நடத்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழந்தைகள் சந்திக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவேதான் தன்னார்வலர்கள் மூலம் வசனங்கள் இன்றி இசை வாசிக்க முகபாவங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக வீதி நாடகங்களை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். ஏற்கெனவே 2 வீதி நாடகங்களை நடத்தி உள்ளோம். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே, சென்னையில் வார்டு வாரியாக வீதி நாடகங்களை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதன்மூலம், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு குழந்தைகள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago