தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்ததால் - நாளை முதல் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் : மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால் ஆட்சியர் அலுவலகங்களில் நாளை முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 13-ம் தேதி வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி, அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், நிகழ்ச்சிகள் நடைபெற தடைவிதிக்கப்பட்டது.

இதற்கிடையில், கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த மக்கள்குறைதீர்வு கூட்டம் மீண்டும் நடத்த அரசு அனுமதி அளித்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வேலூர் உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மட்டும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் ஆணையம் நேற்று விலக்கிக் கொண்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெற தடையில்லை. எனவே, நாளை (அக்.18) முதல் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), அமர் குஷ்வாஹா (திருப்பத்தூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வரும் திங்கட்கிழமை (நாளை) முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். கரோனா விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் மனு அளிக்க வேண்டும். இதில், அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள்’’ என தெரி வித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE