ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : வாக்குப்பதிவுக்கான பொருட்கள் இன்று அனுப்பி வைக்க நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை (9-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சீட்டுகள், வாக்குப் பெட்டிகள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கான பொருட்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளுக்கு இன்று (8-ம் தேதி) அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவி, ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி உள்ளிட்ட காலியாக உள்ள 24 பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளை (9-ம் தேதி) நடை பெறவுள்ளது. 24 பதவிகளுக்கான தேர்தலில் மொத்தம் 91 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்தன.

இதனிடையே, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 195 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குச் சீட்டுகள், வாக்காளர் பட்டியல், வாக்குப்பெட்டிகள், அழியாத மை அடங்கிய பாட்டில்கள், வாக்களிக்கப் பயன்படும் முத்திரை, கரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலகத்தில் இருந்து,

இன்று (8-ம் தேதி) அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் இடங்களில் வாக்குப்பதிவு அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓமலூரில் 18, எடப்பாடியில் 10, பனமரத்துப்பட்டியில் 8, அயோத்தியாப்பட்டணத்தில் 7, நங்கவள்ளியில் 5, தாரமங்கலத்தில் 4, மேச்சேரியில் 3, வாழப்பாடி, வீரபாண்டி, தலைவாசலில் தலா 1 என மொத்தம் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு முடிவுற்றதும் போலீஸ் பாதுகாப்புடன் 12 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையக்களுக்கு வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நாளை பொதுவிடுமுறை

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதன்படி வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 15-வது வார்டு, கோணங்கிப்பட்டி, பவித்திரம் ஊராட்சிகள், கபிலர்மலை ஒன்றியத்தில் கொப்பனம்பாளையம் ஊராட்சி, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் கூடச்சேரி ஊராட்சி ஆகியவற்றுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இதுபோல் கொல்லிமலையில் திண்ணனூர் நாடு ஊராட்சி, மோகனூரில் என்.புதுப்பட்டி ஊராட்சி, நாமகிரிப்பேட்டையில் கார்கூடல்பட்டி, திம்மநாய்க்கன்பட்டி, பெரப்பன்சோலை, மங்களபுரம் ஊராட்சிகள், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் காரைக்குறிச்சிபுதூர், எஸ்.உடுப்பம், திருமலைப்பட்டி ஊராட்சி ஆகியவற்றுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது, என நாமக்கல் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

20 பதவிகளுக்கு 65 பேர் போட்டி

ஈரோடு மாவட்டத்தில் 27 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 7 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு நடந்த நிலையில், மீதமுள்ள 20 பதவிகளுக்கு 65 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் நாளை (9-ம் தேதி) நடக்கவுள்ள நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்கு எண்ணிக்கை 12-ம் தேதி 9 இடங்களில் நடக்கவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக, அதிமுக முன்னணி நிர்வாகிகள் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரியில் 13 பதவி...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 13 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக வேட்பாளர் உட்பட 5 பேரும், 3 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 8 பேரும், 9 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 26 பேரும் களத்தில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்லுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்