மல்லசமுத்திரத்தில் போலி நகை அடகு விவகாரத்தில் - கூட்டுறவு வங்கி இயக்குநர் உட்பட 10 பேர் மீது போலீஸில் புகார் :

By செய்திப்பிரிவு

மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நகை மோசடி தொடர்பாக வங்கி இயக்குநர் உட்பட 10 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு உட்பட்ட தள்ளுபடி கடனுக்கு தேர்வு செய்யப்பட்ட நகைகள் பரிசோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அடகு வைக்கப்பட்ட 2 வளையல்கள் மாற்றுகுறைந்த நகை என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமார் உத்தரவின்படி துணைப்பதிவாளர் வெங்கடாசலம் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கூட்டுறவு சங்க எழுத்தாளர்கள் சலோன்மணி, சிவலிங்கம், சுந்தரராஜ் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் 10 பொட்டலங்களில் கவரிங் நகைகளை வைத்து ரூ.11 லட்சத்து 33 ஆயிரத்து 500 கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே மோசடி தொடர்பாக மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில், கூட்டுறவு சங்க இயக்குநர் மற்றும் 6 உறுப்பினர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 எழுத்தர்கள் என 10 பேர் மீது கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் வெங்கடாசலம் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE