டிஎன்பிஎல், வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விவசாய பயிற்சி முகாம் :

டிஎன்பிஎல், வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய விவசாய பயிற்சி முகாம்

நடைபெற்றது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்கக சுற்றுச்சூழல் அறிவியல் துறை இணைந்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, தென்னை சாகுபடியில் நிலையான விளைச்சலுக்கான மேலாண்மை தொழில்நுட்பங்கள், தீவன தரம் மற்றும் கால்நடை மேலாண்மை எனும் தலைப்புகளில் புகழூர் மூலிமங்கலம் சமுதாயக்கூடத்தில் விவசாய பயிலரங்கத்தை அண்மையில் நடத்தியது.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறை குறித்து மண்வளம், மண் பரிசோதனை முறை மற்றும் உரமிடும் முறை பற்றி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை அலுவலர் அர.சாந்தி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன் முன்னிலை வகித்து பேசினார்.

சுத்திகரிக்கப்பட்ட காகித நிறுவன கழிவு நீர் மேலாண்மையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பங்கு குறித்து சூழலியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் மு.மகேஸ்வரி குறிப்புரை வழங்கினார். தொழில்நுட்ப உரையில் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் க.ராஜமாணிக்கம், தென்னை மரத்தில் பூச்சி தாக்குதல் மற்றும் மேலாண்மை பற்றி விரிவான கருத்துக்களை எடுத்துரைத்தார்.

மேலும், கால்நடை மருத்துவர் ம.திருநாவுக்கரசு, கால்நடை கொட்டகை அமைப்பு மற்றும் கால்நடை இனம் தேர்ந்தெடுப்பு பற்றி தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார். சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் பெ.தங்கவேல் வரவேற்றார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன உதவி மேலாளர் வ.பிரசாத் நன்றி கூறினார். இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன நிர்வாகிகள் மற்றும் விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE