கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் :

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதி தெரு, மேலக்காரத் தெரு, மருதூர் பேரூராட்சி அக்ஹாரம் தெரு மற்றும் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது, தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறைகள், காலுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி தூர் வாரிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய ஆட்சியர், அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிக்கு நன்றி தெரிவித்தார்.

ஆய்வின்போது, குளித்தலை கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையர் சுப்புராம், வட்டாட்சியர் விஜயா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கிருஷ்ணராயபுரம் யுவராணி, மருதூர் ராஜகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE