பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலையில் - தொழிலாளி மர்மச்சாவு: உறவினர்கள், பாமகவினர் சாலைமறியல் : கடலூர் மக்களவை உறுப்பினர் மீது புகார்

By செய்திப்பிரிவு

பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி நேற்று மர்மான முறையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு கடலூர் எம்பி தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் கடலூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பங்குதாராக உள்ள முந்திரி தொழிற்சாலை உள்ளது.இந்த நிறுவனத்தில் முந்திரி பதப்படுத்தி, ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் நிறுவனத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாக்கி, பின்னர் இரவு காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது உடலில் காயத்தை கண்ட போலீஸார், தற்போது அவரை காவல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது. எனவே காலையில் அழைத்து வாருங்கள் எனக்கு கூறியதும், கோவிந்தசாமியை அழைத்துக் கொண்டு மீண்டும் நிறுவனத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனராம்.

காலை அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பாமகவினர் கோவிந்தராஜூவின் உடலில் காயம் இருப்பதை அறிந்து, அவரை கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ் மற்றும் நிறுவனத்தில் உள்ள சிலர் தாக்கிக் கொலை செய்துவிட்டதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி காடாம்புலியூர் காவல் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து, அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து கடலூர் ஏடிஎஸ்பி அசோக்குமார் மற்றும் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் கோவிந்தராஜூவின் மகன் செந்தில்வேலன் அளித்தப் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஎஸ்பி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE