கரோனா பரவாமல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலை கரோனா தொற்று பரவாமல் நடத்துவது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
சுகாதாரத்துறை செயலர் அருண் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, பொது சுகாதாரம் துணை இயக்குநர் முரளி, கரோனா நோடல் அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கரோனா நோய் பரவாமல் ராஜ்யசபா தேர்தலை நடத்துவது, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி கரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை மீறாமல் இத்தேர்தலை நடத்த வேண்டும். இத்தேர்தலில் பங்கேற்கும் உறுப்பினர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பாகவே தேர்தலில் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.