காரைக்குடியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு : 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

காரைக்குடியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போயின.

சில நாட்களுக்கு முன்பு, காரைக்குடி அருகே பெரிய காரை பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். இவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனது உறவினரை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினார்.

உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து ராகவேந்திரன் அளித்த புகாரில் குன்றக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேரமாக்களை ஆய்வு செய்ததில் சிவகங்கை அருகே இடையமேலூரைச் சேர்ந்த அஜய் (22), திருப்புவனத்தைச் சேர்ந்த வேலு (35), மதுரையைச் சேர்ந்த இளையபாரதி (26 ) ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திய வாகனங்களை தொடர்ந்து திருடியதை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE