சேந்தமங்கலத்தில் விவசாயி கொலை :

சேந்தமங்கலம் அருகே விவசாயியை கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பி தலைமறைவான மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சேந்தமங்கலம் அருகே கல்லேரிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (60). இவர் தனது மனைவி சுகுணாவுடன் (45) நேற்று முன்தினம் இரவு தோட்டத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும், ராஜேந்திரனை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். சுகுணாவின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அப்போது ராஜேந்திரன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீஸார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பேளுக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையான ராஜேந்திரன் சேலத்து பெரியார் என அழைக்கப்பட்ட ஜி.பி. சோமசுந்தரத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE