திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது - பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.4.50 லட்சம் வழிப்பறி : சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை

பெட்ரோல் பங்க் மேலாளரிடம் இருந்து ரூ.4.50 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் மூவரை திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூரைச் சேர்ந்தவர் வேணுகோபால் (43). இவர் சித்தாளந்தூர்- ஜேடர்பாளையம் பிரிவு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வசூலான ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கியில் செலுத்த திருச்செங்கோட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பணத்தை இரு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் வைத்திருந்தார். இந்நிலையில் திருச்செங்கோடு அருகே மண்கரட்டுமேடு என்ற இடத்தில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தபடி வந்த 3 பேர் வேணுகோபால் வண்டியை மடக்கி ரூ. 4.50 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி தலைமறைவாகினர்.

இதில் அதிர்ச்சியடைந்த வேணுகோபால் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வேணுகோபாலிடம் இருந்து பணம் பறித்துச் சென்ற மர்மநபர்களை அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE