பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் நடவடிக்கை : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமய விழாக்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய அரசின் விதிமுறைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

கரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா அன்று பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி கிடையாது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், தனி நபர்கள் வழிபாடு செய்த சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் வழிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தே.இளவரசி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்