சுகாதார ஆய்வாளர் பணியில் சேருவதற்காக - போலி சான்றிதழ் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை : திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி சான்றிதழ்களை கொடுத்து சுகாதார ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா தடுப்பு பணிக்காக ‘அவுட் சோர்சிங்’ முறையில் சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, செய்யாறு சுகாதார மாவட் டத்தில் 2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்களாக 53 பேர் பணிய மர்த்தப்பட்டனர். அவர்களில், பலர் போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவம் சார்ந்த அடிப்படை பணிகள் குறித்து தெரியாமல் செயல்பட்டு வந்தது மருத்துவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதும், காவல்துறை மூலம் விசாரணை நடத்தி, போலி சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமாரிடம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சங்கீதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.

அதில், “செய்யாறு சுகாதார மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிக்காக கடந்தாண்டு மே மாதம் முதல் வெளி ஆதார முறையில் (அவுட் சோர்சிங்) 2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது துறை சார்ந்த பணிகளின் செயல்பாடு மீது சந்தேகம் ஏற்பட்டது.

சான்றிதழ்களில் முறைகேடு

இதுகுறித்து புகார்கள் வந்ததால், அவர்களது சான்றிதழ் கள் சரிபார்க்கப்பட்டதில் முறை கேடு நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தனர். அதில், மூடப்பட்ட ஒரு கல்லூரியின் பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி சான்றிதழை வழங்கியவர் விவரங்களை சேகரித்து, தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேபோல், திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்திலும் முறை கேடு நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியும் நடை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாரை நேற்று தொடர்பு கொண்டு கேட்ட போது, “2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பு படித்து விட்டு பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. போலி சான்றிதழ் வழங்கியவர்கள், அவர்களுக்கு அச்சடித்து கொடுத்த வர்கள் மற்றும் இதன் பின்னணி யில் உள்ள அனைவரது மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் முழு விவரமும் தெரிவிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE