சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் தொழில் வரியைச் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோர், தொழில்புரிவோரிடம் மாநகராட்சி சார்பில் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
6 மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வரை இருந்தால் தொழில் வரி இல்லை. ரூ.21 ஆயிரத்து 1 முதல் ரூ.30 ஆயிரம் வரை ரூ.135, ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை ரூ.315, ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை ரூ.690, ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரை ரூ.1,025, ரூ.75,001 மற்றும் அதற்கு மேல் ரூ.1,250 என அரையாண்டு தொழில் வரி செலுத்த வேண்டும்.
கரோனாவால் ஏராளமான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டும், தொழில்கள் பாதிக்கப்பட்டும் இருந்ததால், இந்த வரியை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில், சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் 2021- 22 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டு தொழில் வரியை செலுத்த, வரும் நவம்பர் 1-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.