புளியங்குடி அருகே ரூ.30.50 லட்சம் மதிப்புள்ள - புகையிலை பொருட்கள், வாகனங்கள் பறிமுதல் : கட்டிட உரிமையாளர் உட்பட 5 பேர் கைது

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள முள்ளிகுளத்தில் தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து, வியாபாரிகளுக்கு மொத்த விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்பி கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த ரூ.8.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், ரூ.12 லட்சம் ரொக்கப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், வேன் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.30.50 லட்சம் ஆகும்.

விசாரணையில் சேலம் பகுதியில்இருந்து புகையிலைப் பொருட்களைகொண்டு வந்து, பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முள்ளிகுளத்தைச் சேர்ந்த கட்டிட உரிமையாளர் செங்கன் (50), புகையிலை பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்த சேலம் மாவட்டம், மேச்சேரியைச் சேர்ந்த ஓட்டுநர்கள் நடராஜ் (45), கோவிந்தராஜ் (22), புகையிலை பொருட்களை வாங்குவதற்கு வந்த சேர்ந்தமரத்தைச் சேர்ந்த குமார் (31),கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்த துரை (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கட்டிடத்தில் இருந்த ரூ.8.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், ரூ.12 லட்சம் ரொக்கப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்