வறட்சி பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி வேண்டும் : மதிமுக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சுரண்டையில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டப் பொருளாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சுரண்டை பேரூர் செயலாளர் துரைமுருகன் வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி சுப்பையா, மாநில மருத்துவர் அணி செயலாளர் சுப்பாராஜ் உரையாற்றினர். சட்டப்பேரவை உறுப்பினர் சதன் திருமலைக்குமார், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், “திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத் திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழித்தடத்தில் தாமிரபரணி விரைவு ரயில் என்ற பெயரில் தினசரி ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலி- பாலக்காடு செல்லும் பாலருவி விரைவு ரயில் செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.

திருவனந்தபுரம், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மார்க்கத்தில் பெங்களூரு மற்றும் மும்பைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை இயங்கச் செய்ய வேண்டும்.

வறட்சிப் பகுதியான ஆலங்குளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், மானூர் ஆகிய பகுதிகள் பயன் பெறும் வகையில் மேற்குத்தொடர்ச்சி மலை நீராதாரம் அல்லது தாமிரபரணி உபரி நீரை பயன்படுத்தி நீர்ப்பாசன வசதி செய்ய வேண்டும். செண்பகவல்லி அணை உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகிரி, கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம், பனவடலிசத்திரம், வெங்கடேஸ்வரபுரம், மாறாந்தை, ஆம்பூர் பகுதிகளில் இருந்து தென்காசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். தென்காசியில் அனைத்துத் துறை அலுவலகங்களையும் அமைக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்