தி.மலை அரசு மருத்துவ கல்லூரியில் - தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் : மீண்டும் பணி கேட்டு ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 79 தற்காலிக உதவி செவிலியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளித்தனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தற்காலிகமாக உதவி செவிலியர்கள் (பல்நோக்கு பணி யாளர்கள்) நியமிக்கப்பட்டனர். தனியார் நிறுவனங்கள் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்க்கப் பட்டனர். அதன்படி, அவர்களும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் 79 தற்காலிக உதவி செவிலியர்கள் நேற்று முன்தினம் பணியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷிடம், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி நேற்று மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எங்களது உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வந்தோம்.

இந்நிலையில் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், 79 உதவி செவிலியர்களை நேற்று (நேற்று முன்தினம்) பணி நீக்கம் செய்துள்ளனர். இது குறித்து உரிய காரணம் தெரிவிக்கப்பட்டவில்லை. தனியார் நிறுவனங்கள் மூலம் பணிய மர்த்தப்பட்ட நாங்கள், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். கரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளித்ததால், வீட்டுக்கும் செல்ல முடியால் அவதிப்படுகிறோம்.

கரோனா தொற்று அதிகம் இருக்கும் வரை, எங்களது உழைப்பை பெற்று கொண்ட தமிழக அரசு, இப்போது எங்களை நடுவீதியில் நிற்க வைத்துள்ளது. எங்கள் பணியை நிரந்தம் செய்யுங்கள் என நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் செய்த பணியை தொடர்ந்து செய்ய, அனுமதிக்க வேண்டும். மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வந்தோம். தற்போது, 2 மாதங்கள் ஊதியம் வழங்கவில்லை. நிலுவையில் உள்ள ஊதியத்தை பெற்றுக் கொடுத்து, எங்களது பணியை தொடர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE