சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த 115 இருளர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டன.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தட்டை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட இருளர்குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு பிறந்தது முதல் சாதி சான்று இல்லாததால் அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற முடியாமல் எலி, நத்தை, நண்டு உள்ளிட்டவைகளை பிடித்தும், கூலிவேலைகளை செய்து வாழ்வாதாரத்தை காத்து வந்தனர். கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள மக்கள் சாதிச் சான்று கேட்டு அவ்வவ்போது உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் கொத்தட்டை பகுதியில் உள்ள இருளர் இனமக்கள் சாதிச் சான்று கேட்டு மனு கொடுத்தனர். இதற்கு முன் பல ஆண்டுகளாக மனு கொடுத்த விவரத்தையும் எடுத்து கூறினார்கள். இதனை தொடர்ந்து சார்- ஆட்சியர் மதுபாலன் கொத் தட்டை கிராமத்தில் வசிக்கும் இருளர் மக்கள் குறித்து கடந்த 5 மாதங்களாக கள ஆய்வு விசாரணை செய்தார்.
அதன் அடிப்படையில் அப்பகுதியில் வசிக்கும் 115 இருளர் இன மக்களுக்கு நேற்று அவரது அலுவலகத்தில் சாதிச் சான்று வழங்கினார். இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட சார்-ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago