கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை :

By செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-2022ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி) 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டத்தில் உள்ள 197 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,377 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை ஜூலை 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

எல்.கே.ஜி சேர்க்கைக்கு 31.7.2021 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பெற்றோர் இணையதளம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களில் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் உள்ள நலிவடைந்த பிரிவு பெற்றோர் வருமானச் சான்றிதழ் நகலோடும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினர்) சாதி சான்றிதழ் நகலோடும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் (மாற்றுத்திறன் குழந்தைகள், துப்புரவு தொழிலாளரின் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள்) தகுந்த சான்றிதழ் நகலோடும் விண்ணப்பிக்கலாம்.

மனுதாரரின் இருப்பிடத்தில் இருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்று, பெற்றோர் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்