வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான குடும்ப அட்டை வழங்கக்கோரி மீனவ பெண்கள் மனு :

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளாக மாற்றித்தரக்கோரி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அரசின் நலத்திட்டங்களை பெறும் வகையில் தங்கள் ரேஷன் கார்டுகளை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான குடும்ப அட்டைகளாக மாற்றித் தரக்கோரி ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கருணாமூர்த்தி கூறியதாவது: மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் ஏழை மீனவர்கள், கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படுகின்றனர். இந்த சூழலில் அரசின் நிவாரண உதவிகள் இவர்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது. இவர்களில் 90 சதவீதம் பேருக்கு, வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்ற என்பிஹெச்ஹெச் குறியீட்டுடன் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்ற குடும்ப அட்டைகளாக (பிஹெச்ஹெச்) மாற்றி வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE