தன்னார்வலர்களுக்கு கரோனா கவச உடை வழங்க கோரிக்கை :

கரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் தன்னார்வலர்களுக்கு தேவையான கரோனா பாதுகாப்பு கவச உடை, கிருமிநாசினிகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் முஹம்மது ரபீக், செயலாளர் ஷாஜஹான், பொருளாளர் ஜியாவுதீன் அஹமத் ஆகியோர், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் தெரிவித்திருந்தது:

பெரம்பலூர் மாவட்டத்தில் சமீப நாட்களில் கரோனாவால் உயிரிழந்த 15 பேர், உடல்நலக்குறைவால் உயிரிழந்த 2 பேர் என மொத்தம் 17 பேரின் உடல்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இறுதிச் சடங்கு செய்து, நல்லடக்கம் செய்துள்ளனர். மேலும், இந்த அமைப்பின் சார்பாக வி.களத்தூரில் கரோனா பேரிடர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கபசுர குடிநீர் வழங்குதல், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைபோன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அங்கீகரித்து, அரசுடன் இணைந்து பணியாற்ற உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தல்படி பாதுகாப்பாக இறுதிச் சடங்கு செய்து, நல்லடக்கம் செய்ய தேவையான கரோனா பாதுகாப்பு கவச உடை மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை தன்னார்வலர்களுக்கு அரசு இலவச மாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE