ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்புத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டமைப்புச் செயலாளர் அபுபக்கர் சித்திக், கூட்டமைப்பு பொருளாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரோனா பரவும் நேரத்தில் மக்களோடு நேரடி தொடர்பில் பணியாற்றுகிற ஊராட்சி மன்றத் தலைவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், ஊராட்சிக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும், கரோனா காலத்தில் போதிய நிதியின்றி தள்ளாடும் ஊராட்சி மன்றங்களுக்கு கூடுதல் நிதியாக ரூ.3,00,000-ஐ மற்ற கணக்குகளில் இருந்து கணக்கு எண் 1-க்கு மாற்றுவதற்கு உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.