தென்காசி மாவட்டத்தில் மக்களிடம் அலட்சியப்போக்கு காரணமா? - கரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிப்பு : உடனடி பரிசோதனையும், சிகிச்சையுமே உயிர்காக்கும்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் பொது மக்களிடம் அலட்சியப்போக்கு காரணமாக கரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிக அளவில் உள்ளது. அறிகுறி ஏற்பட்டதும் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் உயிரிழப்பை குறைக்க முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் முதல் அலையை விட இரண்டாம் அலையில் வீரியம் அதிகமாக உள்ளது. பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை மட்டுமின்றி உயிரிழப்புகளும் அதிக அளவில் உள்ளது. அண்டை மாவட்டங்களை ஒப்பிடும்போது தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருந் தாலும், உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட் டோரின் மொத்த எண்ணிக்கை திருநெல்வேலி மாவட்டத்தை விட தென்காசி மாவட்டத்தில் 50 சதவீதம் குறைவாக சுகாதாரத்துறை புள்ளிவிவரத்தில் உள்ளது. ஆனால், உயிரிழப்புகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அளவுக்கு தென்காசி மாவட்டத்திலும் உள்ளது. இதேபோல், தூத்துக்குடி மாவட் டத்தை விட 50 சதவீதம் குறைவான பாதிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ளது. ஆனால், மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை தூத்துக்குடி மாவட்டத்தை விட அதிகமாக உள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.ராஜேந்திரன் கூறும்போது, “திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய சம அளவிலேயே உள்ளது. சமூக, பொருளாதார அடிப்படையில் இரு மாவட்டங்களும் ஒன்றை ஒன்று நெருங்கி இருக்கக் கூடிய மாவட்டங்கள். இந்த 2 மாவட்டங்களின் கரோனா பாதித்தோர் பட்டியலை பார்க்கும் போது பெரும் வேறுபாடு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாகவும், தென்காசி மாவட்டத்தில் பாதிப்பு குறைவாகவும் உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு இணையான அளவு கரோனா பரிசோதனை தென்காசி மாவட்டத்தில் மேற் கொள்ளப்படவில்லை என்பதுதான்.

தென்காசி மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் பழைய மாவட்டத்துக்கு இணையான, வலிமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தமிழகத்தில் குறைவாக கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 4 மாவட்டங்களில் ஒன்றாக தென்காசி மாவட்டம் உள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அலட்சியப் போக்கு

பொதுமக்களிடம் அலட்சியப் போக்கு நிலவுவதே உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “கரோனா தொற்று ஏற்பட்ட பெரும்பாலானோர் தானாகவே நோய் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். உரிய நேரத்தில் பரிசோதனை செய் துகொள்ளாமல், சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். இதனால் அவர்களுக்கும், அவருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தொற்று பரவல் அதிகரிக்கிறது.

கரோனா தொற்றானது நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அதிகமாக பரவி உள்ளது. கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொண்டு, உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் குறைவாகவே உள்ளது.

மூச்சுத்திணறல் அதிகரிக்கும் போதுதான் அச்சம் வந்து மருத்துவமனைக்கு செல்கின்றனர். முன்னதாகவே சிகிச்சை எடுத்துக்கொண்டால் உயிரிழப்பை பெருமளவில் தவிர்க்கலாம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்